'இன்று சாதனையாளர்கள் பட்டியலில் முதன்மை இடத்தை வகிப்பவர்களூள் பலரும் சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தவர்களே. ஆனால் அவற்றால் முடங்கிப் போய்விடாமல் மீண்டு வந்தவர்கள்.'
"சோதனைகள் ஒன்று அல்லது இரண்டு என்றால் பரவாயில்லை. ஆனால் வாழ்க்கையே சோதனையாகிப் போயிற்றே என்ன செய்வேன்." என்று கலங்கி நிற்கும் நம்மைப் போன்றோர் இன்றைய சாதனையாளர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் இருப்பவர்களுடைய வாழ்க்கையை சற்றே புரட்டிப் பார்த்தால் தெளிவு பிறந்துவிடும்.
நாம் வாழும் காலத்திலேயே, நம் கண் முன்பே வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்த எத்தனை பேர் தாங்கள் உயர்ந்தது மட்டுமல்ல தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தியுள்ளனர்.
அவர்களுக்கும் நமக்குமுள்ள வேறுபாடு என்ன?
நாம் சோதனைகளை வேதனைகளாக்கி சோர்ந்து போகிறோம்.
அவர்கள் அதே சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிகொண்டார்கள்.
இது சிலருக்கு மட்டும் சாத்தியமாவதென்ன?
நம்மால் ஏன் முடியவில்லை?
'அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்'
அதாவது இது செய்வதற்கு முடியாத செயல் என்று சோர்வடையாமல் இருக்க வேண்டும்; இடைவிடாத முயற்சி அதைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும் என்கிறார் வள்ளுவர்.
அவரே தொடர்ந்து
'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்' என்கிறார்.
அதாவது மனத்தளர்ச்சியில்லாமல் எத்தகைய குறைபாடும் இன்றி மேன்மேலும் முயன்று உழைப்பவர் வெற்றிபெறும் முயற்சிக்கு இடையூறாக வரும் விதியையும் வென்றுவிடுவார்.
சொல்வது எளிது. ஆனால் அவற்றை வாழ்க்கையில் கடைபிடிப்பது கடினம்.
உண்மைதான்.
தோல்வியைக் கண்டு சோர்ந்துவிடாமல் இருப்பது எளிதல்ல. அதற்கு மிகுந்த மனப்பக்குவம் தேவை.
ஓரிரண்டு நாட்களிலோ ஏன், ஓரிரண்டு ஆண்டுகளிலோ வந்துவிடுவத்தல்ல இந்த பக்குவம்..
ஆனால் தொடர்ந்து முயற்சித்தால் கைகூடாதது எதுவுமில்லையல்லவா?
முயற்சி திருவினையாக்கும்!
****
Saturday, February 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment