‘பிறருதவி என்பது ஒருவழிப்பாதையல்ல’
நாம் செயல்படுத்த நினைத்ததை செயல்படுத்த இயலாமல் தடங்கலையோ, தாமதங்களையோ எதிர்கொள்ளும் நேரங்களில் மற்றவர் உதவியை நாடுவதில் தயக்கம் காட்டலாகாது.
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது.
சிலர் சிறுவயது முதலே நினைவாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள். சிறிது நேரம் படித்தாலே போதும். அப்படியே மனதில் பதிந்துவிடும். படித்தவற்றை அப்படியே தேர்வில் எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுவிடுவர்.
வேறு சிலருக்கு படித்ததையே மீண்டும், மீண்டும் படித்தால்தான் நினைவில் நிற்கும்.
இன்னும் சிலருக்கு எத்தனை முறை படித்தாலும் நினைவில் நிற்கவே நிற்காது.
இது மாணவப் பருவத்தில்.
படிப்பு முடிந்து ஒரு அலுவலில் அமர்ந்தாயிற்று.
சிலர் தங்களுடைய அலுவல்களில் முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்துவிடுவார்கள்.
அவர்களுக்கு நிகரான அறிவாற்றலும் செயல்திறனும் இருந்தும் சிலருக்கு எத்தனை கடினமாக முயற்சி செய்தாலும் வெற்றி கிடைப்பது அரிதாக இருக்கும். பல தோல்விகளுக்குப் பிறகே வெற்றிக்கனியை அவர்கள் அடையமுடிகிறது.
இன்னும் சிலருக்கோ எத்தனை முயன்றாலும் தாங்கள் நினைத்ததை அடைய முடியாமல் தோல்வியிலேயே முடிவதுண்டு.
இத்தகைய சூழலில் நம்மில் பலரும் இருந்திருக்க வாய்ப்புண்டு.
முதல் சாரார், அதாவது முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்துவிடுபவர்களுடைய அணுகு முறையைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுடைய வெற்றியின் ரகசியம் நமக்கு தெரியவரும்.
எந்த ஒரு காரியத்திலும் நாம் ஈடுபடுவதற்கு முன் அதை முழுமையாக செய்து முடிக்கக் கூடிய ஆற்றல் நம்மிடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து தேவைப்பட்டால் நம்முடைய சக அலுவலர்களுடைய உதவியை நாடிப் பெற்றால் வெற்றி நிச்சயம்.
உதவி கோருவதை யாசகம் என்று கருதுபவர்களும் மற்றவர்களிடம் உதவி கேட்டு சென்றால் அவர்களும் பிறகு நம்மிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்களே என்றும் கருதுபவர்களுமே தங்களுடைய முயற்சிகளில் தேக்கத்தையும், தோல்விகளையும் சந்திக்கிறார்கள் என்பதை நான் என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
உதவி கேட்டு நிற்பது நம்முடைய கையாலாகாத்தனத்தை மற்றவர்களுக்கு காட்டிவிடுமே என்று ஒருபோதும் சிந்திக்கலாகாது.
ஆனால் ஒன்று. நாம் பிறருக்கு உதவி செய்திருந்தால் மட்டுமே நமக்கு தேவைப்படும் நேரத்தில் மற்றவர்கள் நம்முடைய துணைக்கு வர தயாராயிருப்பார்கள்!
பிறருதவியைக் கோருவதென்பது ஒரு வழிப்பாதையல்ல என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
நாம் செய்யும் உதவி நமக்கு தேவைப்படும்போது கேட்காமலே திரும்பி வரும்!
*******
Tuesday, December 12, 2006
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment