Friday, December 01, 2006

முயற்சி திருவினையாக்கும்!

‘நாம் எந்த ஒரு விஷயத்தையும் செயல்படுத்த முயற்சி செய்தால் மட்டுமே அது நம்மால் இயலுமா, இயலாதா என்பது நமக்கே தெரியவரும்.’

இயலாமை என்று ஒன்றும் இல்லை.

பள்ளிப் பயிலும் சிறுவனுக்கு இரு சக்கர சைக்கிள் ஓட்டுவது மலைப்பாகத்தான் தோன்றுகிறது.

ஆனால் தந்தையின் உதவியுடன் தட்டுத் தடுமாறி பயிலும்போது பலமுறை விழுந்து, சிறாய்ப்புக் காயங்களுக்கு ஆளாகி நாளடைவில் சில்லென்று காற்று முகத்தில் வீச தன்னுடைய நண்பர்கள் முன்னிலையில் ஹாண்டில்பாரிலிருந்த கைகளையும் எடுத்துவிட்டு ஜாலவித்தைக் காட்டுகையில் மனதில் தோன்றும் மகிழ்ச்சி!

அதற்கு ஈடு இணை உண்டா என்ன?

அதை செயல்படுத்த அச்சிறுவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் சந்திக்க வேண்டிய தோல்விகளையும் வேதனைகளையும் முன்கூட்டியே சிந்தித்துப் பார்த்திருந்தால் அவனால் அதில் இறங்கியிருக்க முடிந்திருக்குமா என்பது சந்தேகமே..

ஆனால் நம்முடைய வயதும் படிப்பும் அளித்திருக்கும் இந்த  அனுபவம் சில சமயங்களில் நம்மால் எந்த ஒரு விஷயத்திலும் இறங்குவதற்கு முன்பு அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்து அதில் நம்மை இறங்கவிடாமலே செய்துவிடுகிறது.

எழுந்து நடந்தால் விழுந்துவிடுவேன் என்று பத்து மாத பாலகனுக்கு தெரியாததால்தானே பல முறை விழுந்தும் எழுந்து நடப்பதில் குறியாயிருக்கிறது?

அதுபோன்ற மனநிலையுடன்தான் நாமும் ஒவ்வொரு விஷயத்திலும் இறங்குகையில் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தை செயல்படுத்த முனைகையில் அது நம்மால் முடியுமா, முடியாதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வதில் தவறில்லைதான்.

ஆனால் முடியாது என்று நம்முடைய உள்ளுணர்வு கூறுமானால் அதை உடனே ஏற்றுக்கொண்டு நம்மால் முடியாது என்ற முடிவுக்கு வரலாகாது.

ஏன் முடியாது என்ற எதிர்கேள்வியையும் நம்மை நாமே கேட்டு அதற்கு நம்முடைய பகுத்தறிவு கூறும் காரணங்கள் என்னென்ன என்பதை அமர்ந்து ஆராய்ந்து அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்பதைக் கண்டுணரவேண்டும்.

அப்போதுதான் நம்முடைய முயற்சி வெற்றியைத் தரும்..

சரி.. அப்படியே நம்முடைய முயற்சி தோல்வியில் முடிந்தாலும் சோர்வடையாமல் மீண்டும் அமர்ந்து நம்முடைய முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது என்பதை அலசி ஆராய தயக்கம் காட்டக்கூடாது.

இன்றைய தோல்வியில் நாளைய வெற்றி உதயமாகலாம் அல்லவா?

********

4 comments:

துளசி கோபால் said...

எண்ணித்துணிக கருமம்.....ன்னு வள்ளூவர் சொல்லி இருக்கறதும் இதுதானே?

ஆனா, முயற்சி (செய்தால்) திருவினை யாக்கும்.

நாம் முயலணும். அதுதான் முக்கியம். அப்பத்தான் கடவுள் அருளும் கிடைக்குமாம்.
'யத்தனம், பிரயத்தனம், தெய்வத்தனம்' னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க.

tbr.joseph said...

வாங்க துளசி,

'யத்தனம், பிரயத்தனம், தெய்வத்தனம்' னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. //

இன்றைய குடும்பங்கள்ல இந்த மாதிரி முதிர்ந்த அனுபவசாலிகளோட பங்கு குறைஞ்சிட்டதாலோ என்னவோ இத்தகைய அறிவுரைகள் நம்முடைய பிள்ளைகளுக்கு தகுந்த தருணத்தில் கிடைப்பதில்லை.

கோவி.கண்ணன் [GK] said...

//சரி.. அப்படியே நம்முடைய முயற்சி தோல்வியில் முடிந்தாலும் சோர்வடையாமல் மீண்டும் அமர்ந்து நம்முடைய முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது என்பதை அலசி ஆராய தயக்கம் காட்டக்கூடாது.//

ஜோசப் ஐயா !

முயற்சி செய்து தோல்வி அடைந்தாலும் முயற்சித்தோம் என்ற திருப்தி இருக்கும். கடமையை செய்பலனை எதிர்பார்க்கமல் என்று இதைத்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்!

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

முயற்சி செய்து தோல்வி அடைந்தாலும் முயற்சித்தோம் என்ற திருப்தி இருக்கும்.//

சரியாகச் சொன்னீங்க..

கடமையை செய்பலனை எதிர்பார்க்கமல் என்று இதைத்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்!//

நம்முடைய கடமையைச் செய்ததற்கு உடனே பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாகாது என்பதுதான் இதற்கு பொருள் என்று நினைக்கிறேன்..