‘காதலும் நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.’
காதல் என்பது காதலனுக்கும் காதலிக்கும் இடையில் உள்ளது மட்டுமல்ல.
கணவன், மனைவி, தந்தை, மகன்/மகள், நண்பர்கள் என எல்லா உறவுக்குமே காதல் பாலமாக அமைகிறது.
அத்தகைய காதலால் உருவாகும் நட்புக்கும், உறவுக்கும் பரஸ்பர நம்பிக்கை அடித்தளமாக அமைய வேண்டும்.
நம்பிக்கையில்லாத நட்பும் உறவும் வெறும் மேலோட்டமான, உடல் சம்பந்தப்பட்ட, செயற்கையான, உள் நோக்கம் கொண்டதாகவே இருக்க வாய்ப்புள்ளது.
மேலை நாடுகளில் ஏன் நம் இந்தியாவிலும் கூட சமீப காலமாக திருமண உறவுகளில் விரிசல் ஏற்பட முதன்மைக் காரணமாக இருப்பது இந்த நம்பிக்கையற்றத்தனம்தான் என்றால் மிகையாகாது.
பைபிளில் வருகின்ற ஒரு வாக்கியத்தை இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன்.
‘மலையை அசைக்கவல்ல நம்பிக்கை இருந்தும் உன்னிடம் அன்பில்லையென்றால் பயனில்லை..’
இது எதைக் காட்டுகிறது?
‘உன் மீது நான் அன்பு கொண்டிருக்கிறேன். ஆனால் உன் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நீ எனக்கு துரோகம் செய்கிறாய் என்று நினைக்கிறேன்.’ என்று காதலன் தன் காதலியிடமோ அல்லது கணவன் தன் மனைவியிடமோ கூறினால் அந்த உறவு நிலைத்திருக்க முடியுமா?
அந்த உறவில் காதல், அன்பு இருக்கத்தான் முடியுமா?
நான் உன்மீது வைத்திருக்கும் காதல் முழுமையானது ஆனால் நம்பிக்கை? அது சந்தர்ப்ப சூழலைப் பொறுத்தது. அப்படியென்றால் அந்த காதலும் அதே சூழலைப் பொறுத்ததுதான் என்று பொருளாகிறது.
நட்பிலும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் அவசியம்.
ஒரு குடும்பத்தில் அமைதியும், சமாதானமும், சந்தோஷமும் நிலைத்து நிற்க குடும்பத்தினரிடையில் பரஸ்பர நம்பிக்கை எந்த அளவுக்கு அவசியமோ அதே போன்ற ஏன் அதற்கும் மேலான அளவு நம்பிக்கை ஒரு நிறுவனம் சிறப்பாக பரிணமிக்க அவசியமாகிறது.
தனக்குக் கீழே பணிபுரிகிறவர்களுக்கு தேவைப்படும் அதிகாரத்தை வழங்க அவர்களுடைய தலைவருக்கு அவர்கள் மீது முழு நம்பிக்கை மிக, மிக அவசியமல்லவா?
அவர்களை நம்பாமல் முழு அதிகாரத்தையும் தன் வசம் வைத்துக்கொள்ளும் அதிகாரிக்கு எந்த அளவுக்கு ஊழியர்கள் விசுவாசத்துடன் உழைப்பார்கள் என்று நாம் அனுபவித்து உணர்ந்ததுதானே?
‘இந்த காலத்து ஆண் பிள்ளைகளை நம்ப முடியாது. அதனால அவனுங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கறதுக்குள்ள அவன் சம்பாத்தியத்துல நமக்குன்னு தேவையானத சேர்த்து வச்சிக்கணும்.’ என்று சிந்திக்கும் பல பெற்றோர்களை திருமணம் முடிந்தவுடன் கைவிட்டு விட்டு செல்லும் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன்.
‘நான் இப்படி செய்வேன்னு நினைச்சித்தான இதுவரைக்கும் நான் சம்பாதிச்சு குடுத்தத சேர்த்து வச்சிக்கிட்டீங்க? இப்ப அதையே வச்சிக்கிட்டு சந்தோஷமா இருங்க.. நான் எதுக்கு?’ என்று மகன் கேட்டால் அது நியாயந்தானே?
காகித மலர்களில் வாசத்தை எதிர்ப்பார்த்துப் பயனில்லை..
நம்பிக்கையில்லாத உறவுகளும் நாளடைவில் கசங்கி கிழியத்தான் செய்யும்..
*******
Tuesday, November 28, 2006
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment