‘உலகின் மிகப் பெரிய செல்வந்தனும் ஏழைதான்.. உள்ளத்தில் அன்பு இல்லாவிட்டால்...’
உலகின் செல்வங்கள் உறவைத் தருவதில்லை.
அப்படியே புதிய உறவுகளை ஏற்படுத்தினாலும் அவை நிலைத்து நிற்பதில்லை.
பணம் வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை பணம் போனால் பந்துக்களும் பறந்துபோகும் என்பதும்.
பணத்தால் ஏற்படும் பந்தம் பணம் இருக்கும்வரைதான். பாசத்தால் ஏற்படும் பந்தமோ பத்து தலைமுறைக்கும் நிலைத்து நிற்கும்..
‘நீ உலகையே தனதாக்கிக் கொண்டாலும் உன் ஆன்மாவை இழந்துவிட்டால் என்ன பயன்?’ என்றார் கிறித்துவ புனிதர் ஒருவர்.
ஆன்மாவையே இழந்துவிடுவதென்றால் அன்பு இல்லாத, பாவ சிந்தனைகள் நிறைந்த உள்ளம்.. அது இருந்தென்ன பயன்?
ஆணவம் பிடித்த மனிதனிடத்தில் அன்பை எப்படி எதிர்பார்ப்பது?
பிறருடைய வெற்றியைச் சகித்துக்கொள்ள இயலாத ஒரு மனிதனிடத்தில் அன்பை எப்படி எதிர்பார்ப்பது?
பணம் பாதாளம்வரை பாயும் என்பது உண்மைதான்.
அன்பு இல்லாத பணம் படைத்த மனிதன் மரணத்திற்குப் பிறகு செல்லும் இடமும் பாதாளம்தான்.
செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த அன்னைத் திரேசா ஏழை எளியவர்கள் மீது மாளா அன்பு கொண்டிருந்தார்.
அவருடைய ஆசிரமத்தைத் துவங்கிய சமயத்தில் அவரிடம் பணம் இருக்கவில்லை, நிம்மதியாக வசிக்க இடம் இருக்கவில்லை. ஆனால் அவருடைய உள்ளத்தில் அன்பு நிறைந்து வழிந்தது.
அந்த அன்புதான் கொல்கொத்தா வணிகர்கள், செல்வந்தர்கள் ஏன் அவருடைய அலுவலிலே இடைஞ்சலாயிருந்தவர்களுடைய கடின மனதையும் கரைத்தது..
பொருளில்லார்க்கு இல்லை இவ்வையகம் என்றான் வள்ளுவன்..
ஆனால் அன்பில்லார்க்கு இல்லை சொர்க்கம், மறுவாழ்வு!
இதுதான் நிரந்தர உண்மை!
Saturday, November 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment