‘மகிழ்ச்சியோடு நாம் பிறருக்கு செய்யும் உதவி நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையிலிருந்து திரும்பி நம்மிடமே வந்து சேரும்.’
இந்த அவசர உலகத்தில் நம்முடைய தேவைகளையே பூர்த்தி செய்ய நமக்கு அவகாசம் இல்லாதபோது பிறருடைய தேவைகளைப் பற்றி சிந்திக்க நேரம் எங்கே?
இது நம்மில் பலரும் கேட்கும் கேள்வி.
ஆனால் அதே சமயம் நமக்கு தேவை என்று தோன்றும்போது நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் யாராயிருந்தாலும் உதவி கேட்க தயங்குவதில்லை.
அச்சமயங்களில் நாம் உதவி கோரும் நபர் தன்னுடைய இயலாமையை பணிவுடன் தெரிவித்தாலும் அதை நாம் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை.
அன்றுமுதல் அவரை நம்முடைய ஜன்ம விரோதியாக பாவிக்கத் துவங்கிவிடுகிறோம்.
இது மனித இயல்புதான். இல்லையென்று மறுப்பதற்கில்லை.
இது நம்முடைய சமுதாயத்தில் நான் மிகச் சாதாரணமாக காணும் ஒன்று.
முக்கியமாக சென்னை, மும்பை, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்களில் ஒரே குடியிருப்பில் வசிக்கும் பல நூறு குடும்பங்கள் தனித்தனி தீவுகளாக வசிப்பதைப் பார்த்திருக்கிறோம்.
நான் தற்போது வசிக்கும் குடியிருப்பிலும் இதே நிலைதான். இந்தியாவிலுள்ள சகல மொழி பேசுபவர்களும் இங்கு வசிக்கின்றோம். நான் புதிதாக குடியேறிய சமயத்தில் நான் வசிக்கும் தளத்தில் குடியிருந்தவர்களிடம் நானாக வலியச் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட போதும் என்னை ஏதோ அயல் கிரகத்திலிருந்து வந்தவனைப் போன்று பார்த்தவர்கள்தான் அதிகம்.
சிரித்துப் பேசினால் எங்கே உதவி கேட்டு வந்து நிற்பாரோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.
இப்படி செய்பவர்கள் தங்களுக்கும் பிறருடைய உதவி தேவைப்படும் காலம் ஒன்று வரும் என்பதை மறந்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
என்னுடைய குடியிருப்பில் வசித்து வந்த ஒருவருக்கு ஒரு நாள் விடியற்காலையில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு கையும் காலும் செயலிழந்துப் போனது. வீட்டில் மனைவியும் அவரும் மட்டுமே. ஒரேயொரு மகள். அண்டை மாநிலத்தில் பணிபுரிகிறார்.
அவருடைய மனைவியே அண்டையில் யாரிடமும் உதவி கோராமல் அப்போலோ மருத்துவமனைக்கு தொலைப்பேசி செய்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் சயரன் ஒலியுடன் வாசலில் வந்து நின்றபோதுதான் குடியிருப்பிலிருந்த பலருக்கும் தெரியவந்தது.
மருத்துவ மனை ஊழியர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி புறப்பட்டுச் செல்வதை அடுத்த குடியிருப்பில் குடியிருந்தவர்கள் முதல் ஜன்னல் வழியாக பார்த்தவாறு நின்றிருந்தனரே தவிர யாரும் வெளியில் வந்து என்ன ஏது என்று விசாரிக்க முன் வரவில்லை.
அவரைச் சந்திக்க நானும் என் மனைவியும் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோதுதான் தெரிந்தது அவருடைய மனைவி, கணவன் வலியால் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் என்ன பாடுபட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.
‘ஏன் யாருக்கும் தெரிவிக்காமல் இருந்துவிட்டீர்கள்?’ என்றேன். அதற்கு ‘எதுக்கு சார்? கேட்டாலும் யாரும் உதவி பண்ண வரமாட்டாங்கன்னு தெரியும். அதான் எதுக்குன்னு விட்டுட்டோம்.’
என்னுடைய நீண்ட கால நண்பர், சென்னை வாசி ஒருமுறை வேடிக்கையாகக் கூறினார். ‘சார் இங்க நீங்களா போய் உதவி செஞ்சாக் கூட ஏத்துக்கமாட்டாங்க. இவன் எதுக்கோ அடி போடறான்னு நினைப்பாங்க. இங்க உதவிங்கற வார்த்தைக்கு ஒரு புது அர்த்தம் இருக்கு. அதாவது உங்க தயவை விரும்பவில்லை! அதனால நம்ம வேலைய பாத்துக்கிட்டு போறதுதான் சேஃப்.’
என்ன கொடுமை பாருங்கள்!
Friday, November 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment