Monday, October 23, 2006

நேற்றைய விரோதி இன்றைய நண்பன்!

‘நம்முடைய எதிரிகளை வெற்றிகொள்ள சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதுதான்’

இது நம்முடைய அரசியல்வாதிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பாடங்களுள் ஒன்று.

முக்கியமாக, நம்முடைய தமிழக அரசியல்வாதிகளிடத்தில் சமீப காலமாக மிக சகஜமாக காணப்படும் ஒன்று இக்குணம்.

கடந்த ஐந்து வருட காலத்தில்தான் எத்தனை கூட்டணிகளையும் பிரிவுகளையும் கண்டிருக்கிறோம்?

நேற்றைய எதிரி இன்றைய நண்பன். இன்றைய நண்பன் நாளைய எதிரி. என் எதிரியின் எதிரி என் நண்பன்.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று ‘ஜெ’ மட்டுமல்ல மு.கவும் பல நேரங்களில் பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.

அரசியல்வாதிகளைப் போல் ‘இன்றைய நண்பன் நாளைய எதிரி’ அல்லது ‘என் எதிரியின் எதிரி என் நண்பன்’ என்றெல்லாம் நாம் கருதத் தேவையில்லை..

ஆனால் ‘நேற்றைய எதிரி இன்றைய நண்பன்’. இது நமக்கு தேவையான ஒன்று.

பைபிளில் ஒரு கூற்று வருகிறது. ‘உன்னைவிட பலசாலியான எதிரியுடன் மோத செல்லும் வழியில் உன்னுடைய பலம் என்ன பலஹீனம் என்ன என்பதை எண்ணிப் பார். அவனை வெற்றிக்கொள்ள முடியுமானால் முன்னேறு. இல்லையேல் அவனிடம் சமாதானமாகிவிடு.’

இது இன்றைக்கு மட்டுமல்ல. இவ்வுலகம் உள்ளவரை பொருந்தும்.

ஆனால் எவரும் நமக்கு நிரந்தர நண்பனும் அல்ல.. நிரந்தர எதிரியும் அல்ல, என்பதும் உண்மைதான்.

நம்முடைய கருத்துக்கு மாற்று கருத்து நிச்சயம் இருக்கும் இருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்திருந்தாலே போதும், பாதி பிரச்சினை தீர்ந்தமாதிரிதான்.

என்னுடன் ஒத்துப்போகாதவரெல்லாம் எனக்கு எதிரானவர் என்ற கருத்துள்ளவருக்கே எதிரிகள் இருப்பர்.

கருத்து வேற்றுமைகள் உறவுகளை முறிக்கத் தேவையில்லை என்று மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டாலே போதும், இத்தகைய அர்த்தமற்ற விரோத மனப்பான்மை அறவே அகன்றுபோய்விடும்.

வாழும் காலம் சொற்பமே. இதில் நம்மால் முடிந்தவரை நண்பர்களையும் உறவுகளையும் சம்பாதித்துக் கொள்ளாமல் விரோத மனப்பான்மையை மனதில் வளர்த்துக்கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை, லாபமும் இல்லை..

மனதை விசாலமாக வைத்துக்கொள்வோம்.

நட்பும், உறவும் மலர வழி வகுப்போம்.

****

6 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கருத்து வேற்றுமைகள் உறவுகளை முறிக்கத் தேவையில்லை என்று மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டாலே போதும்//

நூற்றில் ஒரு வார்த்தை ஜோசப் சார்!
நம் கருத்து தாழ்வாக நினைக்கப்பட்டு விடுமோ என்ற பயமும் சேர்ந்து தான், விரோதத்தை மேலும் வளர்க்கிறது!

//என்னுடன் ஒத்துப்போகாதவரெல்லாம் எனக்கு எதிரானவர் என்ற கருத்துள்ளவருக்கே எதிரிகள் இருப்பர்//

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை
என்ற ஐயனின் குறளை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

G.Ragavan said...

இதத்தான ஓவ்வொரு ஊர்லயும் சொல்லீருக்காங்க. ஆனா யாரு கேக்கா? அவன் கருத்து நம்ம கருத்தோட ஒத்துப் போகலைன்னா அவன் விரோதியாகிப் போறானே இப்பல்லாம். அவன எப்படியாவது மட்டந்தட்டி நம்ம கருத்துதான் சரியின்னு மண்டையில ஓங்கிக் குட்டிச் சொல்லீட்டு...அவனப் பேச விடாமச் செஞ்சிட்டா.......ஒரு சந்தோசம் வரும் பாருங்க...அது நீங்க சொல்ற வழியில வராதே. :-(

லதா said...

if you can't win them, join them
:-)

tbr.joseph said...

வாங்க லதா,

if you can't win them, join them//

இந்த பதிவை ஒரே வாக்கியத்தில் அடக்கிவிட்டீர்கள்!

நன்றி லதா.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

.......ஒரு சந்தோசம் வரும் பாருங்க...அது நீங்க சொல்ற வழியில வராதே. //

உண்மைதான்.. அதாவது இந்த வக்கிரம் பிடித்த சந்தோஷத்தை அனுபவிக்க நினைப்பவர்களுக்கு..

tbr.joseph said...

வாங்க KRS,

ரெண்டு நாளைக்கு முன்னால இந்நாள், முன்னாள் பீஹார் முதலமைச்சர்கள் ஈத் விருந்தில் கட்டிப் பிடித்துக்கொண்ட காட்சியைக் கண்டவுடன் நம் இன்னாள், முன்னாள் தமிழக முதல்வர்களை நினைத்துக்கொண்டேன்..

அதன் தாக்கம்தான் இந்த பதிவு..