Saturday, January 03, 2009

திருக்காட்சி திருவிழா

இயேசு பாலகன் பிறந்த செய்தியறிந்து அவரை தரிசிக்க வேண்டுமென்ற ஒரே ஆவலினால் உந்தப்பட்டு நெடுதூரம் பயணித்த மூன்று அரசர்களின் (ஞானிகள், வாண் ஆய்வாளர்கள் எனவும் கூறலாம்) திருவிழா.

இதை குட்டி கிறிஸ்துமஸ் என கோவாவில சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இதையே திருக்காட்சி திருவிழா என தமிழிலும் Epiphany என ஆங்கிலத்திலும் கூறுகிறார்கள்.

பெர்ஷியா நாட்டைச் சார்ந்த இந்த மூன்று ஆய்வாளர்களும் வானில் தோன்றிய நட்சத்திரத்தைக் கண்டு அதைப் பிந்தொடர்ந்து சென்று இயேசு பாலகன் பிறந்திருந்த குடிலை அடைந்தனர் என்கிறது பைபிள்.


ஆகவே இறைமகன் இயேசு யூதர்களுக்கு மட்டுமின்றி புறவினத்தாருக்கும் தன்னை வெளிப்படுத்திய தினமாகவும் இது கருதப்படுகிறது.

அதாவது இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமல்லாமல் பெர்ஷியா நாட்டைச் சார்ந்த யூதர்களல்லாதவர்களுக்கும் தன்னுடைய பிறப்பை வெளிப்படுத்திய நாள் இது.

காலங்காலமாக இத்திருவிழா ஜனவரி 6ம் நாள் உலகெங்குமுள்ள கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவுக்காக செய்யப்படும் அலங்காரங்கள் இத்திருவிழா தினம்வரை வீடுகளில் வைக்கப்படுவதுண்டு.

என்னுடைய வீட்டில் செய்யப்பட்டுள்ள அலங்காரங்களான குடில், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் சாந்தா க்ளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஆகியவற்றின் புகைப்படம் மேலே!

அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (Better late than never!!)

அன்புடன்,
ஜோசஃப்

Monday, September 08, 2008

மலேஷியாவில் தேவாலய வழிபாடு

சமீபத்தில் கோலாலம்பூர் (மலேசியா) சென்றிருந்தபோது என்னை மிகவும் கவர்ந்தவற்றுள் ஒன்று அங்குள்ள கத்தோலிக்க தேவலாயங்களில் நடைபெற்ற வழிபாடுகளில் அனைத்து பக்தர்களின் ஈடுபாடு.

வழிபாடுகளில் கலந்துக்கொள்ளும் மக்கள் பல இனங்களைச் சார்ந்தவர்களாகவும் பல மொழிகளைப் பேசுபவர்களாகவும் உள்ளதால் வழிபாடு சமயங்களில் உரைக்கப்படும் ஜெபம் மற்றும் பதிலுரைகளை ஆங்கிலம்,சீனம் மற்றும் தமிழில் ஆலய சுவற்றில் Power Point Slides வடிவத்தில் ஒளிபரப்புகின்றனர்.

ஆகவே வழிபாட்டில் கலந்துக்கொள்ளும் அனைவரும் தங்கள், தங்கள் மொழியிலேயே ஜெபிக்க முடிகிறது.

அதுபோலத்தான் பாடகர் குழுக்களூம்.

கடந்த வருடம் கிறீஸ்துமஸ் திருவிழா அன்று என்னுடைய மகள் சார்ந்திருந்த பங்கு தேவாலயத்திற்குச் செல்லாமல் சற்றே தள்ளியிருந்த திருக்குடும்ப தேவாலயத்தில் நடைபெற்ற தமிழ் திருப்பலிக்குச் சென்றிருந்தேன்.

ஒரு தமிழக தேவாலயத்திற்குள் நுழைந்ததுபோன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது அங்கு குழுமியிருந்த மலேசிய வாழ் தமிழ் கத்தோலிக்கர்களின் கூட்டம்.

தமிழக தேவாலயங்களிலும் நான் அத்தகைய பாடகர் குழுவைப் பார்த்ததில்லை என்றால் மிகையாகாது. சுமார் இருபது பாடகர்களைக் கொண்ட (பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவியர்) குழு ஆர்மோனியம், தபேலா, வயலின் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளுடன் பாடல்களைப் பாடி பரவசப்படுத்தினர்.

என் கவனத்தை ஈர்த்த இன்னொன்று அங்குள்ள குருமார்கள் வழிபாட்டை நடத்திய விதம். சரியான நேரத்தில் வழிபாட்டைத் துவங்குவது, சிறிய கச்சிதமான பிரசங்கம் (பத்து நிமிடத்திற்கு மேல் செல்லவில்லை)பங்கைச்சார்ந்த மூத்த பக்தர்களையும் (Laymen) திவ்விய நற்கருணையை வழங்குவதற்கு அனுமதிப்பது போன்றவை.

விளைவு? மொத்த வழிபாடும் வாரநாட்களில் அரை மணி நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமைகள் 45 முதல் 60 நிமிடங்களிலும் திருவிழா காலங்களில் அதிகபட்சம் 75 நிமிடங்களுக்குள்ளும் முடிந்துவிடுகிறது.

இதனால் இங்கு நடைபெறுவது போன்று திவ்விய நற்கருணையோடு முடித்துக்கொண்டு யாரும் தேவாலயத்தை விட்டு வெளியேறிடுவதில்லை. இறுதி ஆசீர் வரை மட்டுமல்லாமல் நன்றி கீதத்திலும் அனைவரும் பங்கு பெறுகின்றனர்.

நம்முடைய தேவாலயங்களிலும் இத்தகைய முறை வருமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

Thursday, April 03, 2008

இயற்கையில் இறைவன்!


Look at those hands

This is so awesome to me……..breathtaking to see this. WOW.


It is called: God's hands.
I took this picture on Hwy 30, traveling to London, KY. It has given meStrength in the times of trouble. I feel I should share it with the rest ofThe world. I hope it is an inspiration to you. It just goes to show what We already know.... We have a God and he's watching over us.

இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

Friday, September 28, 2007

அரசியலும் ஆன்மீகமும்

Bowler should bowl, batsman should bat என்பார்கள். இரண்டிலும் வல்லவரானாலும் மட்டை பிடிக்க வேண்டிய நேரத்தில் பந்து எரிபவரைப் போல் ஓடிவந்து கையிலுள்ளதை வீசினால் என்னாவது!

அதுபோலத்தான் அரசியலும் ஆன்மீகமும்.

ஆன்மீகவாத அரசியல் பேசுவது எவ்வளவு தவறோ அதுபோலத்தான் அரசியல்வாதி ஆன்மீகம் பேசுவதும்.

ஆட்சியில் இருந்தாலும் ஆட்சிக்கு வெளியில் இருந்தாலும் அரசியல்வாதி அரசியல்வாதிதான், மறுப்பதற்கில்லை. ஆனால் ஆட்சிக்கு வெளியில் இருக்கும் சமயங்களில் பேசுகிற அதே தோரணையில் (பொறுப்பற்ற முறையில் என்று சொன்னால் சற்று அதிகபட்சமாகிவிடும்) ஆட்சியில் இருக்கும் சமயத்திலும் பேசினால்? பிரச்சினைதான். அதிலும் மதம் அல்லது இறைநம்பிக்கையைப் பற்றி பேசும்போது...

எதிரணியில் இருக்கும் அரசியல்வாதி ஆட்சியாளரை குறைகூற ஆன்மீகம் என்ன எதை வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்வது சகஜம்தான். அவர் ஆட்சியில் இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளையே ஆட்சியை இழந்த பிறகு வேறொருவர் செயல்படுத்த முனையும்போது அதை எப்படியாவது தடுத்து நிறுத்த முனைவதும் ஒன்றும் புதிதல்ல.

அதைத்தான் இன்று எதிரணியில் அமர்ந்திருக்கும் பா.ஜ.கவும் அ.இ.அ.தி.மு.கவும் செய்கின்றன. அந்த வகையில் அவர்களுக்கு இப்போது ஆயுதமாக பயன்படுவது ஆன்மீகம். அது வலுவிழந்து போகின்ற சூழலில் வேறெதையாவது கையில் எடுத்துக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள். ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்கு அயோத்தி ராமரானாலும் ராமேஸ்வரம் ராமரானாலும் ஒன்றுதான். காலத்திற்கேற்ப, சந்தர்ப்பத்திற்கேற்ப எடுத்துக்கொள்ளப்படும் கருவியும் கருத்தும் மாறிக்கொண்டே போகும்.

இதுபோலத்தான் கூட்டணிகளும். காங்கிரஸ் ஆட்சியை பதவியிழக்க செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மதசார்பற்ற ஜனதா தளம் மதவாத பா.ஜ.கவுடன் இணைந்து ஆட்சியை பகிர்ந்துக்கொள்ளவில்லையா? இதெல்லாம் இந்தியா போன்றதொரு நாட்டில் மிகவும் சகஜமப்பா என்கிற நிலைதான் இன்று!

மதம், இறை நம்பிக்கை என்பது அதில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் புனிதமானது. இறைவனில் நம்பிக்கையில்லை என்று கூறுபவர்களிடம் அதையெல்லாம் எதிர்பார்ப்பதே முட்டாள்தனம். நான் இறை நம்பிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கிறேனா என்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. அது என்னுடைய சொந்த விஷயம். ஆனால் பிறருடைய நம்பிக்கையை குறைத்துக் கூறுவதற்கோ அல்லது எள்ளி நகையாடுவதற்கோ எனக்கு உரிமையில்லை. அது என்னுடைய சொந்த கருத்து என்று ஒரு பொறுப்பான பதவியிலிருந்துக்கொண்டு நான் கூறினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அரசியல்வாதியானாலும் சரி ஆன்மீகவாதியானாலும் சரி, அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஜால்ரா அடிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் முழுநேர அரசியல்வாதிகளாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களும் இருக்கலாம் உயர் பதவியில் உள்ளவர்களும் இருக்கலாம். அவரவர் தேவைக்கேற்ப அதை வளைத்து, உருமாற்றி அர்த்தம் கொள்வது வழக்கமாகிப் போன ஒன்று.

இன்று மு.க அவர்கள் கூறியதை சரி என்று சொல்ல ஒரு கூட்டம் இருப்பது போல் வேதாந்தி சொல்வதிலும் தவறில்லை என்று சொல்லவும் ஒரு கூட்டம் இல்லையா?

இந்த இரண்டு கூட்டங்களுமே தங்களுக்கு பொதுவான எதிரியை தாக்க நாளைக்கு ஒன்று சேர்ந்துக்கொண்டாலும் வியப்பதற்கில்லை.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கிற நிலை நாளை ஆன்மீகத்திலும் இதெல்லாம் சகஜமப்பா என்கிற நிலை வந்தாலும் வரும்.. யார் கண்டது!!

Saturday, September 22, 2007

சோ ஒரு படித்த கோமாளி

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சோ எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர்.

முட்டை, முட்டைக் கண்களை உருட்டி பல படங்களில் அவர் அடித்த லூட்டிகள் மறக்க முடியாதவை.

தேன் மழைன்னு ஒரு படம். கடத்தி வச்சிருக்கற கும்பல் அவரோட நண்பரோட தொலைப்பேசி எண்ணை சொல்றியா இல்லையான்னு கத்திய காட்டி மிரட்டும். இவர் கண்களை உருட்டியவாறு சொல்வார்'டேய் இதுக்கெல்லாம் பயந்து அந்த ஃபோன் நம்பர் 4678120னு சொல்லுவேன்னு பாத்தியா? சொல்ல மாட்டேன்.' அதாவது ஃபோன் நம்பர சொல்லிட்டு சொல்லமாட்டேன்னு சொல்வார். இதே மாதிரி தொடர்ந்து வீட்டு விலாசத்தையும் சொல்லிட்டு சொல்வேன்னு பாத்தியா, சொல்ல மாட்டேன்னு சொல்வார்.

தமாஷாருக்கும்.

அதே மாதிரி இந்த வாரத்து வார இதழ் ஒன்னுலயும் (அந்த எந்த இதழ்னு சொல்லணுமா என்ன?) நிறைய ஜோக் அடிச்சிருக்கார்.

அதாவது மு.க அவர்களுக்கு இந்து மத கடவுள்களை பழிப்பதற்குத்தான் தெரிகிறது. ராமர் இருந்தாரா இல்லையா, முருகர் இருந்தாரா இல்லையா என்றெல்லாம் கேட்கும் இவர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்துவ மதங்களில் நடந்தவைகளுக்கெல்லாம் சரித்திர, அறிவியல் சாட்சிகளை கேட்பாரா என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் நாங்கள் அப்படியில்லை. கிறிஸ்து மரித்து உயிர்த்ததற்கு சரித்திர, அறிவியல் சான்றுகள் உண்டா என்று நாங்கள் கேட்போமா? கேட்க மாட்டோம். என்று தமாஷ் செய்திருக்கிறார்.

'அதான் கேட்டுட்டீங்களே சார், அப்புறமென்ன கேக்க மாட்டோம்னு சொல்றீங்க?' அப்படீன்னு நாங்க கேப்போமா சோ அவர்களே, கேட்க மாட்டோம்.

சோ ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மற்றபடி சுப்பிரமண்ய சாமியைப் போலவே இவரும் ஒரு படித்த முட்டாள். கோமாளி, சந்தர்ப்பவாதி. சமயத்திற்கேற்றாற்போல் பேசுவார், எழுதுவார். நாகரீகம் என்று வாய் கிழிய பேசுவார். ஆனால் அவருடைய எழுத்தில் அதை பார்க்க முடியாது.

மு.க. இந்துக்களை பரிகசித்து, இழித்து பேசிவிட்டார் என்றால் அவரை சாடிவிட்டு போங்க. அத விட்டுட்டு மத்த மதங்களை பற்றி எதுக்கு சார் பேசறீங்க? சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிட்டு நாங்க சொல்ல மாட்டோம்னு வேற சொல்லிக்கறீங்க.... ஏன் சார் இதென்ன காமெடி டயலாக்கா?

என்னத்த படிச்சி என்ன பிரயோசனம்? இதுல சட்டவல்லுனர்னு வேற சொல்லிக்கறது.

கேவலம்.

கோமாளின்னு வேணும்னா சொல்லிக்குங்க. அதான் சரியாருக்கும்.

Friday, September 14, 2007

தரம் இறங்குவது சரியா?

கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலக விஷயமாக சென்னை டைடல் பார்க் வரை செல்ல வேண்டியிருந்தது.

சாதாரணமாக அலுவலக அலுவல் நிமித்தம் வெளியில் செல்லும் சமயங்களில் என்னுடைய வாகனத்தில் செல்வதில்லை. அதற்கென வங்கி நியமித்திருக்கும் டிராவல் நிறுவனத்திலிருந்து அமர்த்தப்பட்ட வாகனத்தில் செல்வது வழக்கம்.

போக்குவரத்து குறைந்திருக்கும் நேரங்களிலேயே (non peak hours) அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் வாகனங்கள் நிறம்பி வழிவதுண்டு. காலை நேரத்தில் கேட்கவே வேண்டாம். அந்த சந்திப்பிலிருந்து வலப்புறம் திரும்பும் (It corridor) வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

அன்றும் அப்படித்தான். என்னுடைய வாகனம் சந்திப்பை நெருங்கவும் சிவப்பு விளக்கு விழவும் சரியாக இருந்தது. அதற்கு முன் எப்படியாவது சந்திப்பைக் கடந்துவிடவேண்டுமென்ற எண்ணத்துடன் வேகமாய் சென்ற என்னுடைய ஓட்டுனர் எத்தனை முயன்றும் அவருக்கு முன்பு சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது தொடாமால் நிறுத்த முடியவில்லை.

என்னுடைய வாகனத்தின் முகப்பு பம்ப்பர் அவருடைய வாகனத்தை 'தொட்டது' என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயம் 'இடிக்க'வில்லை.

ஆனால் அவருக்கு வந்ததே கோபம். வாகனத்தை என்னுடைய வாகனத்திற்கு குறுக்கே நிறுத்திவிட்டு (அதாவது வழிமறித்துவிட்டு) இறங்கி வந்து என்னுடைய ஓட்டுனரின் கதவைத் திறந்து சரமாரியாக வசைமாரி பொழிந்து தள்ளிவிட்டார். அதாவது எழுத்தில் வடிக்க முடியாத வார்த்தைகளால்.

என்னுடைய ஓட்டுனர் மட்டும் சளைத்தவரா என்ன? அவரும் வாகனத்திலிருந்து இறங்கி பதிலுக்கு வார்த்தை விளையாட்டில் இறங்கினார். அக்கம் பக்கத்து வாகன ஓட்டுனர்கள் காதுகளைப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு.

சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தேன். நின்றபாடில்லை.

வேறு வழியின்றி இறங்கி அந்த இளைஞரைப் பார்த்தேன். கழுத்தில் தொங்கிய ஐ.டி கார்டிலிருந்தே அவரும் டைடல் பார்க்கிலிருந்த மிகப் பெரிய ஐ.டி நிறுவனத்தில்தான் பணியாற்றுகிறார் என்பது தெரியவந்தது. நிச்சயம் பொறியாளர். பார்ப்பதற்கு படு ஸ்மார்ட்டாக இருந்தார்.

நான் அவரிடம், 'என்ன தம்பி நீங்க. பாக்கறதுக்கு ஸ்மார்ட்டா ஒரு எக்ஸ்க்யூட்டிவ் மாதிரி இருக்கீங்க, நீங்களும் இவர் லெவலுக்கு இறங்கி வந்து பேசறீங்களே, ரிலாக்ஸ்.' என்றேன்.

சட்டென்று அவருடைய முகமே மாறிப்போனது. அக்கம்பக்கத்து வாகனங்களில் அமர்ந்திருந்த பெரும்பாலோனோர் அந்த இளைஞரைப் போன்றவர்கள்தான். அவர்களும் முகம் சுளிக்கும் அளவுக்கு அவர் பேசியிருந்ததை அவர் உணர்ந்திருப்பார் போலிருந்தது. சட்டென்று சென்று தன்னுடைய வாகனத்தை விலக்கிக் கொண்டார். அடுத்த நொடியே சிவப்பு விளக்கு பச்சையாக மாற புறப்பட்டுச் சென்றார்.

ஆனால் என்னுடைய வாகன ஓட்டிக்கு என் மீது வருத்தம். 'என்ன சார் என்னுடைய லெவல்லுன்னு சொல்லி என்னையும் மட்டம் தட்டிட்டீங்களே. அவன் அப்படி பேசறப்போ நா எப்படி சார் பேசாம இருக்கறது?' என்றார் வருத்தத்துடன்.

நான் புன்னகையுடன், 'நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க தம்பி?' என்றேன்.

'எட்டாம் க்ளாஸ் சார். ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சார் சம்பந்தம்?'

'இருக்கு தம்பி. படிக்கற படிப்புதான் நமக்கு ஒரு அந்தஸ்த்த ஏற்படுத்தி குடுக்குது, இல்லையா?'

நான் சொல்ல வந்தது புரிந்திருக்க வேண்டும். அவர் பதில் பேசாமல் இருந்தார்.

'அவர் நிச்சயம் எஞ்சினியரிங் படிச்சிருக்கணும். நல்ல அந்தஸ்த்துல இருக்கார். அதனால அப்படி சொன்னேன். உங்கள மட்டம் தட்டணும்னு இல்லை. ஆனா அதுக்காக உங்கள மாதிரி ஆளுங்களும் இந்த மாதிரி தரக்குறைவான பேச்சு பேசணும்னு இல்லை. சரிதானே?'

அவர் உடனே, 'நீங்க சொல்றது சரிதான் சார். மன்னிச்சிருங்க.' என்றார்.

ஒருவர் நம்மை தரக்குறைவாக பேசினார் என்பதற்காக நாமும் அதே பாணியில் பேசவோ, எழுதவோ செய்தால் பிறகு நமக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்?

சிந்திக்க வேண்டிய விஷயம்...

Wednesday, February 21, 2007

சாகரனின் மரணம்.. ஒரு ஃப்ளாஷ்பேக்...

12.02.2007

முந்தைய சனியன்று சென்னையில் நடந்து முடிந்திருந்த முத்தமிழ்மன்ற வலைஞர்களின் முதல் கூட்டத்தின் புகைப்படங்களுடனான செய்தியை வாசிக்கும் ஆவலுடன் மன்றத்தில் நுழைகிறேன்.

முகப்பு பக்கத்திலேயே 'மன்றத்தின் மாமனிதர் சாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி' என்று கருப்பு வெள்ளை பேனர் வரவேற்கிறது.

யாரிந்த சாகரன்? இரண்டாண்டு காலமாக வலைஞராக இருந்த நான் கேட்டிராத பெயராயிற்றே என்று மருகுகிறேன்.

சில நிமிடங்களில் நண்பர் மூர்த்தி அவர்களின் பதிவு.

ரியாத் தமிழ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எழுத்துக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளருமான சாகரன் என்கிற திரு. கல்யாண் அவர்கள் மாரடைப்பால் காலமானார். அவருடைய உடல் ஒபய்த் மருத்துவமனையில் தற்சமயம் வைக்கப்பட்டுள்ளது. முத்தமிழ் மன்றத்தின் அஸ்திவாரமாகவும், அதன் தூண்களில் ஒருவராகவும் இருந்தவர் என்கிறது அந்த பதிவு.

பிறகு தமிழ்மண நிர்வாகத்தின் பதிவு, மதி அவர்களின் பதிவு.. அதனைத் தொடர்ந்து துளசி துவங்கி பல வலைஞர்களின் பதிவுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன..

முத்தமிழ் மன்றம் சாகரன் அவர்களின் மரண அஞ்சலியைத் தவிர வேறெந்த பதிவும் தற்சமயம் இடவேண்டாம் என்று தன்னுடைய உறுப்பினர்களைக் கோருகிறது.

மன்றத்தின் இளம் கவிஞர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு சாகரனுக்கு கவியஞ்சலியை செலுத்துகின்றனர்.
.
சாகரன் எங்கள் மன்றத் தூண்
சாக வயதில்லா எங்கள் தோழனை
வேகமாய் காலன் இடித்த தூண்
ஆகமம் அடுக்கா பழி இதுகாண்

அஞ்சலி செய்யும் வயதா உனக்கு?
நெஞ்சு பொறுக்கு தில்லையே மனம்
மிஞ்சும் எதிர் காலம் யாதென்றே
நஞ்சு அருந்திய உடலாய் பதறுதே

மன்றத்தின் தெய்வமாய் உயர்ந்திட்ட சாகரன்
தென்றலாய் நண்பர் மனமதில் உறையட்டும்
இன்றுநாம் சூளுரைப்போம் உயிர் கொடுத்தும்
என்றும் இம்மாமன்ற மாறாப்புகழ் காக்க.

என்கிறார் மன்றத்தின் வழிநடத்துனர்களில் ஒருவரான நண்பர் ரத்தினகிரி..

முகம் பாராது
இதயத்தால் இணைந்து நின்றோம்
பேசாமல் பேசப்படுவது கண்டேன்
இன்று பேசாமல் இருக்கிறாயே?

அஜீவன்..

இன்னும் பலர்..

அரைகுறைத் தமிழில் கட்டுரையும் கதையும் எழுதப்பழகியிருந்த எனக்கு கவிதை வராமல் சண்டித்தனம் செய்கிறது..

நண்பர் பாலராஜன் கீதா தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு கேள்விப்பட்டீர்களா என்கிறார். கேள்விப்பட்டேன்.. காலையிலிருந்து அவர் புகழ் பாடி வராத பதிவுகள் இல்லையே ஆனால் எனக்குத்தான் அவரை பரிச்சயமில்லாமல் போய்விட்டது என்றுவிட்டு அவரைப் பற்றி சற்று சொல்லுங்களேன் என்கிறேன்..

நானும் அவரும் ஆரம்பகாலத்தில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தோம். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். தேன்கூடு திரட்டியைத் துவக்கியவர். அத்துடன் நண்பர்கள் பலருக்கும் இணையதளங்களைத் துவக்குவதில் இலவசமாக துணைபுரிந்தவர்.. அடுக்கிக் கொண்டே போகிறார்.

வாழுங்காலத்தில் அவருடன் பழக முடியாமற்போனதற்கு பிராயச்சித்தமாக அவருடைய இறுதிச்சடங்கில் பங்குகொள்ள வேண்டும் என்ற முடிவுடன் மன்றத்தில் என் பரிந்துரையை வைக்கிறேன். ஈராயிரம் அளவே உறுப்பினர்கள் கொண்டுள்ள மன்றத்தில் என் கருத்தொத்த நண்பர்கள் உடனே அதனை ஏற்றுக்கொள்கின்றனர்.

முந்தைய சனியன்று நடந்த கூட்டத்தில் பங்குபெற்ற சென்னைவாழ் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் யாரெல்லாம் முடியுமோ அவர்கள் ஒரு குழுவினராக இறுதிச்சடங்கில் பங்குபெற்று மன்றத்தின் சார்பில் ஒரு மலர் வளையம் வைப்பதென முடிவெடுக்கப்படுகிறது.

நண்பர்கள் பாலராஜன் கீதா, மூர்த்தி இருவரும் தொடர்ந்து சாகரனின் இறுதிச்சடங்கைப் பற்றிய செய்தியை அளித்தவண்ணம் இருக்கின்றனர்.

இத்தனை நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் ரியாத்தில் இருந்தும் வழமையான ரெட் டேப்பிசம் திங்களன்று மரித்தவரை சனியன்றுதான் சென்னைக்கு அனுப்பிவைக்க முடிகிறது. இதுதான் எங்களுடைய அவலம் என்று எழுதுகின்றனர் அயல்நாட்டில் வாழும் பல நண்பர்கள்..

சனியன்று..

முன்னமே சொல்லி வைத்திருந்த மலர் வளையத்துடன் சரியாக பிற்பகல் 1.30 மணிக்கு என்னுடைய அலுவலகத்திலிருந்து கிளம்புகிறேன்..

வீட்டு வாசலில் கவலை தேங்கிய முகங்களுடன் எல்லோரும் ஒரே திசையை நோக்கி நிற்பதைக் காண்கிறேன். எனக்கு முன்பாகவே வந்திருந்த மன்ற நண்பர் சுதாகரைப் பார்க்கிறேன். முதல் முறையக சந்தித்தும் அதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கொள்ள இயலாத சூழல்.. அழுகுரல் இல்லாத நிச்சலனமான சூழலைப் பார்த்து அருகிலிருந்தவர் ஒருவரை அணுகி இன்னும் 'பாடி வரலையா சார்' என்கிறேன்.. 'ஏர்போர்ட்லருந்து புறப்பட்டாச்சாம் சார்.. வர்ற நேரம்தான்.' காலை 10.40 மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய விமானம்.. யாருக்கும் கவலைப்படாத நடைமுறை தொல்லைகள்.. வீடு வந்து சேர சுமார் மூன்று மணிநேரம்..

நேர்த்தியான மரப்பெட்டியில் சாகரனின் பூத உடல் வந்து இறங்குகிறது..

பெட்டிக்குள்ளே.. சில நெற்மணிகள்... மத்தியில் தலையிலிருந்து கால்வரை வெள்ளைக் கோடித் துணியால் போர்த்தப்பட்டு..

நான்கு நாட்களாக அழுது அழுது பாறையாகிப்போன முகங்களுடன் சொந்தமும் பந்தமும்.. நான்கு பேர் அப்படியே அணைத்து தூக்கி செல்ல மெல்லிதாக, மிக மெல்லிதாக அழுகைக்குரல்கள்..

படித்த படிப்பு நம்முடைய உணர்வுகளைக் கூட நாகரீகமாகத்தான் வெளிப்படுத்த வைக்கிறது!

சொந்தபந்தத்துடன் அக்கம்பக்கத்து பெண்களும் சரசரவென உள்ளே செல்கின்றனர்.. கண்களை துடைத்தவாறு வெளியே வருகின்றனர்..

இதற்குள் மன்ற நண்பர்கள் பலரும் வந்து சேர.. 'மலர் வளையத்த வச்சிரலாம் சார்.. அப்புறம் கூட்டம் சேர்ந்துட்டா கஷ்டமாயிரும்..' என்கிறார் நண்பர் ஒருவர். என்னுடைய வாகனத்திலிருந்து வளையத்தை எடுத்து தயக்கத்துடன் நுழைகிறோம்..

சிறியதொரு கூடத்தில் தரையில் வெள்ளைத் துணியகற்றப்பட்டு.. மன்றப் பதிவுகள் ஒன்றில் வெளியாகியிருந்த புகைப்படத்தில் இருந்ததைவிடவும் இளமையாய்.. தூக்கத்தில் இருப்பதைப் போல..

மலர் வளையத்தை தலைமாட்டில் வைக்கிறோம்.. என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவருடைய பாதம் சாகரனின் தலையை எங்கே தொட்டுவிடுமோ என்ற பதற்றத்தில் ஒரு நொடி சாகரனின் இளம் மனைவி ஐயோ என் புருசன் என்பதுபோல் தலையை அணைத்துக்கொள்கிறார்.

என்னையுமறியாமல் கண்கள் கலங்கி குளமாகின்றன. சிறியதாயிருந்த கூடத்தில் கூட்டம் நெருக்குகிறது.. பிரிய மனமில்லாமல் இறுதியாய் ஒரு பார்வை அமைதியாய்போன அந்த முகத்தை.. வெளியேறி வாசலில் நிற்கிறோம்..

யாரோ சொல்கிறார்கள்..'பாப்பாவ கூட்டிக்குட்டு வாங்கோ.. பாத்துரட்டும்..'

சாகரனின் மகளைத்தான்.. பாப்பா அங்கு இல்லை.. இருவர் ஓடிச் சென்று அழைத்துவருகிறார்கள்..

வாகனத்தில் இருந்த மூன்று வயது பெண் குழந்தையை சாகரனின் தங்கை தூக்கி வருகிறார். குழந்தை அடம் பிடித்து இறங்கி முகமெல்லாம் புன்னகையுடன் குதித்தவாறு ஓடி வருகிறது....சுற்றிலும் நின்றிருந்த ஆண்களும் திகைப்பை வெளிக்காட்டாமல் பரிதாபத்துடன் குழந்தையையே பார்த்தவாறு..

அடுத்த சில நிமிடத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடிவருகிறது.. விளையாடப் போணும்.. என்னெ விடு..

உறவினர்களுள் ஒருவர்.. 'இன்னும் ஒரு மணிநேரத்துல பொறப்பட்டுருவோம்.. சரியா நாலுமணிக்கு அங்க இருப்போம்..' எங்கிருப்போம்..? மயானத்தில் என்பது அவர் சொல்லாமலே புரிகிறது..

வாசலில் வேதியர்கள் (பூசாரிகள்) மந்திரத்தை துவக்குகின்றனர்.. அமைதியாய் ஆர்ப்பட்டமில்லாமல் நான்கு செங்கற்குளுக்குள் தீச்சுவாலை.. மஞ்சள் நிறத்தில்.. சற்றுத் தள்ளி மூங்கில் பாடை தயாராகிறது.. இதாண்டாப்பா வாழ்க்கை.. வாழற நேரத்துல போற வாகனங்கள் எதுவானாலும்.. கடைசியில போறது இதுலதாண்டா என்கிறது..

வேதியர் ஓதும் எதுவும் விளங்கவில்லை..

சாகரன் தமிழுக்கு சேவையாற்றியவராயிற்றே.. இதுவே தமிழில் இருந்திருந்தால்..

எங்களுடைய வீடுகளில் நடக்கும் கூட்டுப் பிரார்த்தனையை நினைவுகூறுகிறேன்.

'எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்..
மரித்த விசுவாசிகளின் ஆத்மா நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது..

மரித்த சகோதரனின் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி..
அவரை நித்திய தீச்சூளையில் தள்ளிவிடாதேயும்
உம்முடைய நிழலில் வைத்து நித்தியத்திற்கும் காத்தருளும் சுவாமி

இந்த ஆத்மாவை அமைதியாய் போகவிடும் சுவாமி
அமைதியாய் போகவிடும்..

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்..'

விடைபெற்றுச் செல்கையில் வாசலிலிருந்து எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகம் கண்ணில் படுகிறது..

'திரு. கல்யாண்.. பெயரில் வரும் கடிதங்களை மேல் வீட்டில் கொடுக்கவும்..' சாகரனின் சொந்த கையெழுத்தா தெரியவில்லை..

ஆனால் அந்த 'மேல் வீட்டில்' என்ற வார்த்தைகள்.. இப்போது தீர்க்கதரிசனமாய் படுகிறது..

அதுமட்டும் முடிந்தால்.. சாகரனுக்கு அஞ்சலியாய் எத்தனை பதிவுகள்.. எத்தனை கவிதைகள்..

இவையெல்லாவற்றையும் அனுப்பி வைக்க முடியாதா?